//]]>

Friday, January 13, 2017

பணித்தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்படாவிட்டால் போராட்டம் வெடிக்கும்: இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை



வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் சில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணித்தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இல்லையேல் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 10.01.2017 அன்று வெளிமாவட்டத்தில் தமது சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரின் அலுவலகம் முன்பாகத் தமது சொந்த வலயத்துக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களின் மறியலினை மீறிக் கல்வியமைச்சின் செயலாளரின் வாகனம் செல்ல முற்பட்டவேளை ஆசிரியர்கள் சிலர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் செயலாளர் பூட்டப்பட்டிருந்த முன்கதவை ஏறிப் பாய்ந்து வேறொரு வாகனத்தில் சென்றிருந்தார்.
இதனையறிந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் இதனை உறுதிப்படுத்தினர்.
இந்த நிலையில் காயப்பட்ட ஆசிரியர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதேவேளை, கல்வியமைச்சின் செயலாளராலும் ஆசிரியர் ஒருவர் தன்னை தாக்க வந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதாகப் பின்னர் அறிந்தோம்.
ஆனால் தாம் காயமடைந்த நிலையில் செயலாளர் தன்னைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என ஆசிரியர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் சில ஆசிரியர்களுக்கு விசாரணைக்கான பணித்தடை உத்தரவு சில வலயக் கல்விப் பணிமனைக்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
ஊழியர்கள் தாம் பாதிக்கப்படும் போது தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்வது ஜனநாயக ரீதியான உரிமையாகும். இது தொடர்பாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
அதற்குத் தாபன விதிக்கோவையில் அதிகாரிகளை மதிக்காமைக்கு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
ஆயினும், நாம் ஸ்தாபன விதிக்கோவைகளை விட உயர்வானது இலங்கையின் அரசியல் யாப்பு எனவும், அதில் ஜனநாயக நாட்டில் பேசும் சுதந்திரம், ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் உண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் இது அடிப்படை உரிமை எனவும் தெரிவித்திருக்கின்றோம்.
இவ்வாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணித்தடை உத்தரவு உடனடியாக இரத்துச் செயப்பட்டு இலங்கை அரசியல் யாப்புக்கமைய அடிப்படை உரிமை நிலைநாட்டப்படவேண்டும்.
இல்லையேல் ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதற்காக, அடிப்படை மனித சுதந்திரத்தை நிலைநாட்டும் போராட்டமாக அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்துப் போராட்டமாகக் கொண்டுசெல்வோம் என்பதை எச்சரிக்கின்றோம் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment