//]]>

Sunday, February 12, 2017

ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக யாழில் நாளை போராட்டம்


வடமாகாண கல்வியமைச்சினால் ஆசிரியர்கள் மட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும்  அநீதிகளுக்கெதிரான போராட்டமாக நாளை திங்கட்கிழமை (13.02.2017) அன்று செம்மணி வீதியிலுள்ள வடமாகாணக்  கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்துக்கு முன்னால் காலை- 09 மணி முதல் தீர்வு கிடைக்கும் வரையான தொடர்போராட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம்  முன்னெடுக்கவுள்ளது.

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (10) இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

10.01.2017 இல் தமது வெளிமாவட்ட சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் செயலாளரைத் தாக்கியதாகப்  பொய்யான ஜனநாயக விரோத குற்றச்சாட்டுக்களை வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் சுமத்தி அடிப்படையான விசாரணைகள் எதுவுமின்றி  மூன்று ஆசிரியர்களுக்கு பணித்தடை வழங்கப்பட்டது.

ஆனால், இன்றுவரை அவ்வாசிரியர்களை மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையும் வடமாகாணக் கல்வியமைச்சு மேற்கொள்ளவில்லை. இவ்விடயம் தொடர்பாக  வடமாகாணக் கௌரவ முதலமைச்சரின் கவனத்துக்குக்  கவனயீர்ப்பு மூலமாக கொண்டுவந்திருந்த நிலையிலும்  அதற்கான பதிலைக்  கடந்த திங்கட்கிழமை வழங்குவதாகக் கூறிய நிலையிலும், முதலமைச்சரின் செயலகம் எவ்விதமான சாதகமான பதிலையும் வழங்கவில்லை.

வடமாகாணக்  கல்வியமைச்சின் செயலாளரால் பொலிஸில் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டில் கூடச் செயலாளரால் குற்றங்களை நிரூபிக்க முடியாத நிலையில் சமரசத்தில் முடிந்துள்ளது. பொலிஸாரின் முறைப்பாட்டில் தன்னை தாக்கியதாக முறைப்பாடு செய்த ஆசிரியரின் பெயர் தவறானது எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்படியாயின் அந்த ஆசிரியருக்கு ஏன் பணித்தடை வழங்கப்பட்டது? அதேவேளை குறித்த மூன்று ஆசிரியர்களும் அலுவலகத்தில் தன்னை சந்தித்தபோது தாக்க முயற்சித்ததாக செயலாளர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அம்மூவரில் ஒரு ஆசிரியரே செயலாளருடனான சந்திப்பில் கலந்து கொண்டதாக விசாரணையின் போது ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியாயின் மற்றைய இருவருக்கும் ஏன் வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் பணித்தடை வழங்கப்பட்டது?

வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ தவராசா செயலாளரின் கொலரை ஆசிரியர்கள் பிடித்தனர் என ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டை வடமாகாண சபையில் குற்றம் சாட்டியுள்ளார். பொலிஸில் செயலாளரால் தன்னைத் தாக்கியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிலும்  வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரால் செயலாளரின் கொலரைப் பிடித்ததாகக்  கூறப்படும் குற்றச்சாட்டிலும் உள்ள முரண்பாடுகளே ஆசிரியர்கள் மட்டில் வடமாகாணக்  கல்வியமைச்சின் செயலாளராலும், வடமாகாணக்  கல்விப் பணிப்பாளராலும் வேண்டுமென்றே  சுமத்தப்பட்ட பழிதீர்க்கும் நடவடிக்கை என்பது நிருபணமாகியுள்ளது.   இதன்மூலம் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளனர்.

அத்துடன்  இடமாற்றச் சபையில் தீர்மானிக்கப்பட்ட பல விடயங்களை நடைமுறைப் படுத்தாமல் ஏனைய தீர்மானங்களுடன் தொடர்புடைய வெளிமாவட்டக்  கல்வித் தொடர்பாகச் சிந்திக்காமல்  அங்கு நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்தவர்களை விடுவிக்காமல் விட்டது.  இடமாற்றச் சபையின் தீர்மானம் என எமது தொழிற்சங்கத்தினையும் சாடி வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் தப்பிக்க முயற்சிக்கின்றார். எனவே, வடமாகாணக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகள் விசாரிக்கப்படவேண்டும்.

எனவே, வடமாகாண கல்வியமைச்சினால் ஆசிரியர்கள் மட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும்  அநீதிகளுக்கெதிரான போராட்டமாக நாளை திங்கட்கிழமை 13.02.2017 அன்று செம்மணி வீதியிலுள்ள வடமாகாணக் கல்வியமைச்சின் முன்னால்  காலை- 09 மணிமுதல் தீர்வு கிடைக்கும் வரையான தொடர் போராட்டமொன்றை  இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ளது. இதில் அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றிணைந்து பலம் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment