யாழ்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச் சாட்டில் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நால்வரினதும் விளக்கமறியல் யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து விசைப்படகில் இம்மாதம் முதலாம் திகதி நெடுந்தீவுக்குத் தென் மேற்கே ஆறு கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை கடற்படையினர் கைது செய்து யாழ். நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் சந்தேகநபர்கள் இன்று திங்கட்கிழமை(28) மீண்டும் யாழ்.ஊர்காவற்துறை நீதிமன்றப் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது நீதவான் சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிடப்பட்டார்.
0 comments:
Post a Comment