யாழ். மல்லாகம் மகாவித்தியாலய மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை செல்லும் போது வானில் கடத்தப்பட்ட சம்பவத்தையும், இதன்மூலம் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற தன்மையையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இச் சம்பவம் மாணவர்களையும் பெற்றோரையும் வெகுவாகப் பாதித்துள்ளது. அதுவும் மல்லாகம் நீதிமன்றத்துக்கும், காங்கேசன் துறை உதவி மாவட்ட பொலிஸ் ஆணையாளர் அலுவலகத்துக்கும் அண்மையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றவாளிகள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
கடத்தப்பட்ட மாணவியின் புகைப்படத்தை வானில் இருந்தவர்கள் எடுத்து வேறு ஒருவருக்கு அனுப்பியதாகவும், அவர்களால் கடத்துவதற்குத் திட்டமிட்ட மாணவி இவரல்லாத காரணத்தால் அம்மாணவியை வானிலிருந்து வரணிப் பகுதியில் தள்ளிவிட்டதாகவும் அறியமுடிகிறது. இச்சம்பவமானது யாழ். மாவட்டத்தில் மாணவர்களு க்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலையையே கட்டியம் கூறி நிற்கின்றது.
இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாணவர்களும் பெற்றோர்களும் பயமின்றி வாழும் சூழலை விரைவில் காவல்துறை ஏற்படுத்த வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment