//]]>

Monday, November 28, 2016

யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்பு (Photos)


யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை(28) மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். பல்கலைக் கழக ஊழியர்களின் சம்பளக் கணிப்பீட்டில் பல தவறுகள் காணப்படுதல், பல்கலைக் கழகச் சேமலாப நிதியில் நிலுவைப்   பணக் கொடுப்பனவுக்கான வட்டிக் கொடுப்பனவுகள்  வழங்கப்படாமை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் தெரிவித்தனர். 

வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஆரம்பமாக பல்கலைக் கழக ஊழியர்கள் முற்பகல்-10 மணியளவில் பல்கலைக் கழக ஊழியர்கள் சங்க மண்டபத்தில் ஒன்று கூடிக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.  இதன் போது தமது கோரிக்கைகளுக்குப் பல்கலைக் கழக நிர்வாகம் இதுவரை செவிசாய்க்காமை தொடர்பில் ஊழியர்கள் தமது கடும் விசனத்தை வெளிப்படுத்தினர். 

எமது கோரிக்கைகளில் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் என்ன?, கால அவகாசம் தேவைப்படும் விடயங்கள் என்ன? என்பன தொடர்பில் இன்றைய பொதுக் கூட்டத்தில் ஆராய்ந்தோம். உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விடயங்களையும், கால அவகாசம் தேவைப்படும் விடயங்களையும் பிரித்து உடனடியாகச் செய்யப்பட வேண்டிய விடயங்களில் ஒரு சிலவற்றையாவது செய்து தருமாறு பல்கலைக் கழக நிர்வாகத்தைக் கோருவது என முடிவெடுத்துள்ளோம். 

எமது வேண்டுகோளை முன்வைப்பதற்காக இன்றைய தினம் பதிவாளரைச் சந்திக்கவுள்ளோம். பதிவாளரின் பதிலை அடிப்படையாகக் கொண்டே தொடர்ச்சியாக எமது வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment