//]]>

Wednesday, December 7, 2016

கூட்டமைப்பினர் மீது ஊர்காவற்துறையில் தாக்குதல்:15 வருடங்களின் பின் கிடைத்தது நீதி

யாழ் - ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூன்று எதிரிகளுக்கும் இரட்டை மரணதண்டனை விதித்தும், 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து யாழ். மேல் நீதிமன்ற மீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று புதன்கிழமை(07) தீர்ப்பு வழங்கியுள்ளார். 
யாழ்.தீவகப் பகுதியில் கடந்த 28-11-2016 அன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது ஈ.பி.டி.பி கட்சியினர் தாக்குதல் நடாத்தினர். 
இந்தத் தாக்குதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உட்படப் பதினெட்டுப் பேர் காயமடைந்திருந்தனர். 
இந்நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு, யாழ். மேல் நீதிமன்றத்துக்கு சட்ட மாஅதிபரால் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் பாரப்படுத்தப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது. 
இதற்கமைய குறித்த வழக்கு விசாரணை கடந்த 15 நாட்களாகத் தொடர்ச்சியாக யாழ்.மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.குறித்த வழக்கில் நால்வர் குற்றவாளிகளாக இனங் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்குத் தொடருனர் சார்பில் அரச சட்டதரணி நாகரத்தினம் நிஷாந்த், குற்றவாளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி றெமீடியஸ் மற்றும் சாட்சிகளை நலன்காக்கும் சட்டத்தரணியாக கே.சயந்தனும் மன்றில் ஆஜராகியிருந்தனர். இதன்போது குறித்த வழக்குடன் தொடர்புடைய எதிரிகள் நால்வரும் விசாரணை செய்யப்பட்டனர். 
கமல்ஸ்ரோன், ஏரம்பு பொன்னம்பலம் ஆகிய இருவரையும் தாக்கிக் கொலை செய்தமை, 18 பேருக்குப் படுகாயம் விளைவித்தமை, வாகனங்களைச் சேதப்படுத்தியமை போன்ற குற்றங்களுக்காக முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் எதிரிகள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். சந்தேகநபர்கள் ஒவ்வொருவருக்கும் இரட்டை மரண தண்டனையும், 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டதுடன், 
தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
நான்காம் எதிரியான கருணாகரகுரு மூர்த்தி குறித்த சம்பவத்துடன் தொடர்புபடவில்லை என்பதால் அவரை விடுவித்தும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment