கனடாவின் ஒட்டாவா தமிழ் ஒன்றியம் ஒருங்கமைத்து நடாத்திய தமிழ் மரபுத் திங்கள் விழா சனவரி 29 2017 அன்று ஒட்டாவாவில் சிறப்பாக நடைபெற்றது. 300 க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பழந்தமிழர் பாரம்பரியத்தை பேணும் வண்ணம் நடன நிகழ்வுகள், இசை, சிலம்பம் போன்றன இடம்பெற்றது.
கனடியத் தேசிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து மற்றும் இலங்கையில் இடம்பெற்ற இனஅழிப்புப் போரில் உயிரிழந்தவர்களுக்கும் , கனடாவின் சார்பாக போர்க்களங்களில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும் ஒரு நிமிட அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வைத்தியர் துரைராஜா வரதராஜா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் போர் காலத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களையும், காயமடைந்த வேளை எவ்வாறு மருத்துவ உதவிகள் தமக்கு மறுக்கப்பட்ட்து என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகளும் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்வில் உரையாற்றி இருந்தனர். பேச்சாளர்கள் அனைவரும் கனடாவின் வளர்ச்சியில் கனடியதமிழர்களின் காத்திரமான பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர்.
நிகழ்வின் மேலும் ஒரு சிறப்பம்சமாக ரொரண்டோ, மிசிசாகா, பிரம்ரன்
மொன்றியல், கோர்ன்வால் மற்றும் வன்கூவர் போன்ற நகரங்களில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெருமளவில் பங்கேற்றனர்.
இராப்போசனத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு கனடா முழுவதும் தை மாதம் கொண்டாடப்படும் தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டங்களுக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்தது.
நிகழ்வில் கனடாவின் மாநகர, மாகாண, மத்திய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பின்னவரும் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment