இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணத்தின் வடமராட்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள வல்வை உதயசூரியன் கடற்கரையில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு நேற்று 14.01.2017 சனிக்கிழமை மாலை மாபெரும் பட்டப் போட்டித் திருவிழா இடம்பெற்றது.
வல்வை விக்கினேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த பட்டத் திருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் டெனிஸ்வரனும் சிறப்பு விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கமும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது இளைஞர்களால் நேர்த்தியுடன் உருவாக்கப்பட்ட பல்வேறு இராட்சத வடிவங்களிலான பாய்மரப் படகு, மாட்டு வண்டி, இயந்திர மனிதன், இராட்சத ஓணான், ஆள்துளைக் கிணறு தோண்டும் இயந்திரம், நாக பாம்பின் தலை என 80 க்கும் அதிகமான அழகிய பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டன.
இவற்றை பார்வையாளர்களாக வந்திருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
2017 ஆம் ஆண்டின் இராட்சத பட்டத்துக்கான முதல் பரிசினை சுமார் 40 அடி நீளமான இராட்சத ஓணான் பட்டம் பெற்றது. தீருவிலைச் சேர்ந்த திரு. மகேந்திரன் பிரசாந்த் என்பவரே குறித்த பட்டத்தினை வடிவமைத்து இருந்தார்.
போட்டியில் வெற்றியீட்டிய பலருக்கும் பணப் பரிசில்களும், மிக்சி, கிரைண்டர் போன்ற வீட்டுபயோகப் பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டன.
ஆண்டு தோறும் இடம்பெறும் இந்த பிரமாண்ட பட்டப் போட்டியை கண்டுகளிப்பதற்காக இம்முறையும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டுமல்ல இலங்கையின் பல்வேறு பிரதேசங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
ஆரம்பகாலங்களில் இருந்தே கடலோடிகளாக விளங்கிய வல்வெட்டித்துறை மக்கள் பல்வேறு கீழைத்தேச, மேலைத்தேச நாடுகளுக்கு பாய்மரப் படகில் சென்று பட்டம் கட்டும் தொழிநுட்பங்களை கற்று வந்துள்ளனர்.
நம்ப முடியாத பிரமாண்டமான உருவங்களை எல்லாம் வண்ணங்களிலான காகிதத்தில் பட்டமாக செய்து காற்றில் பறக்க விடும் காட்சிகள் உண்மையில் பார்ப்போரை வியக்க வைக்கும்.
வீரத்தின் விளைநிலமாகவும், பிரபாகரன் பிறந்த மண்ணாகவும் வல்வெட்டித்துறை இருப்பதனால் போர் விமானம், யுத்த டாங்கி கூட பிரமாண்ட பட்டங்களாக வானில் வலம் வந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பிரமாண்ட பட்டத் திருவிழா நிறைவுற்றதும் நள்ளிரவு வரை இசைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
0 comments:
Post a Comment