ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரின் நூறாவது பிறந்த தினக் கொண்டாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(17) காலை யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுச் சந்தியிலுள்ள எம்.ஜி. ஆரின் உருவச் சிலைக்கு முன்பாக நடைபெற்றது.
காலை-08.30 மணி முதல் ஈழத்து எம்.ஜி. ஆர் கோப்பாய் ஆர்.சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் பிரதம விருந்தினராகவும், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்.இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் ஆலோசகர் ஆர்.செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர் .
எம்.ஜி ஆரின் உருவச் சிலைக்கு ஈழத்து எம்.ஜி ஆர் மற்றும் விருந்தினர்கள் மாலை அணிவித்ததைத் தொடர்ந்து உருவச் சிலைக்கு முன்பாக நினைவு தீபம் ஏற்றப்பட்டு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எம்.ஜி. ஆர் தொடர்பான சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்த நிகழ்வில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் ஆலோசகர் ஆர்.செல்வம் எம்.ஜி.ஆர் ஞாபகார்த்தமாக அவர் நடித்த அரச கட்டளை என்ற திரைப்படத்திலிருந்து "ஆடி வா...ஆடி வா....ஆடப் பிறந்தவளே ஆடி வா...." என்ற பாடலைப் பாடியதுடன், ஈழத்து எம்.ஜி.ஆரும் " இறைவா....உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு" உள்ளிட்ட எம்.ஜி ஆர் பாடல்கள் பாடி எம்.ஜி ஆர் நினைவுகளை மீட்டியதுடன் அங்கு கூடியிருந்தோரையும் குஷிப்படுத்தினர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி இனிப்புக்கள் பரிமாறப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஈழத்து எம்.ஜி. ஆர் கோப்பாய் ஆர்.சுந்தரலிங்கம் 150 வரையான வறுமைக் கோட்டுக்குட்பட்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் எம்.ஜி ஆர் நினைவாக உடுபுடவைகளும்,பணமும் வ ழங்கி வைத்தார்.
நிகழ்வில் விருந்தினர்களுடன் ஜே-259, கல்வியங்காடுப் பகுதிக் கிராம சேவகர் சி.சுபாஷ்கரன், கொட்டடி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் நா. தனேந்திரன், ஓய்வு நிலை ஆசிரியர் க.தெய்வேந்திரம், சமூக சேவையாளர் மா. கருணாமூர்த்தி, பிரபல வர்த்தகர் க.உதயகுமார், எம்.ஜி.ஆரின் இரசிகர்கள், கல்வியங்காட்டுப் பகுதிப் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எம்.ஜி. ஆரின் நூறாவது பிறந்த நாள் இன்றைய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment