தமிழகத்தின் புகழ் பெற்ற சென்னை பாரதியார் சங்கமும், யாழ்ப்பாணம் பாரதி மன்றமும் இணைந்து மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடாத்தும் 'பாரதியார் விழா' நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(28) காலை- 09 மணி முதல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சென்னை பாரதியார் சங்கத் தலைவர் முதுநிலை வழக்கறிஞர் இரா.காந்தி தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் முதன்மை விருந்தினராகவும், யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஆ.நடராஜன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
விழாவில் சென்னை சரஸ்வதி பரதநாட்டிய வித்தியாலய இயக்குநர் நர்த்தன சிரோண்மணி கிரிஜா முருகன் குழுவினர் வழங்கும் பரத நாட்டிய நிகழ்வும், கலைமாமணி சோபனா ரமேஷ் வழங்கும் பாரதி பாடல்களுக்கான பரத நாட்டிய நிகழ்வும் மேடையேற்றப்படவுள்ளன.
விழாவில் 'இயற்றல், பெயர்த்தல், செய்தல்' எனும் பொருளில் தமிழகப் பேராசிரியர்- உலகநாயகி பழனியும், 'மகாகவி பாரதியின் சமூகப் பார்வை' எனும் பொருளில் பேராசிரியர்- வெ.இராசேந்திரனும், 'வீழ்வெனென்று நினைத்தாயோ' எனும் பொருளில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் சிறப்புரைகள் ஆற்றவுள்ளனர்.
விழாவின் போது யாழ். பல்கலைக்கழக வாழ்நாட் பேராசிரியர் அ.சண்முகதாஸ் "பாரதியார் விருது" வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளார். அத்துடன் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, ஈழத்தின் மூத்த கவிஞர் சோ.பத்மநாதன், செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் ஆகிய சான்றோர்களும், தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் வெ.இராசேந்திரன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சாம் விஜய் ஆகிய சான்றோர்களும் "பாரதி பணிச்செல்வர்" எனும் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த விழாவில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment