//]]>

Sunday, January 7, 2018

சிவத்தமிழ்ச் செல்வியின் பிறந்தநாள் அறக்கொடை விழாவில் சான்றோர்களுக்கு விருது(Videos)

யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் முன்னாள் பெருந்தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி- தங்கம்மா அப்பாக்குட்டியின் 93 வது பிறந்தநாள் அறக்கொடை விழா இன்று ஞாயிற்றுக்கிழமை(07) சிறப்பாக இடம்பெற்றது.

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் இலங்கையின் இளைப்பாறிய பிரதம நீதியரசர் க. ஸ்ரீபவன் தம்பதிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டனர்.

காலை-08.30 மணிக்குத் துர்க்காதேவி ஆலயத்தில் விசேட ஆராதனைகளுடன் ஆரம்பமாகிய விழாவில் ஆலய வளாகத்திலுள்ள சிவத்தமிழ்ச் செல்வி நினைவாலயத்தில் வழிபாடு அதனைத் தொடர்ந்து அம்மையாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துப் பிரார்த்தனை என்பன இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவிகளின் பண்ணுடன் கூடிய திருவாசக ஓதுதலுடன் விழா ஆரம்பமானது. தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தானப் பிரதம குரு சிவஸ்ரீ வா. அகிலேஸ்வரக் குருக்கள், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள், அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் ஆகியோர் ஆசியுரைகள் ஆற்றினர்.

தொடர்ந்து தமிழ்நாடு பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயந்தஸ்ரீயின் விசேட உரை இடம்பெற்றது. தொடர்ந்து அன்னையின் பிறந்தநாள் அறக்கொடை வழங்கல் நடைபெற்றது. இதன்படி, யாழ். போதனா வைத்தியசாலையின் பெண்கள் சத்திரச் சிகிச்சைப் பிரிவு, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை,  மட்டக்களப்பு கல்லடி உப்போடை உதயம் விழிப்புலனற்றோர் சங்கம் ஆகியவற்றிற்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

இதன் போது மன்னார் கல்வி வலயப் பாடசாலைகளில் க.பொ. த சாதாரணதரத்தில் 2018 இல் கற்கும் திறமையின் உச்சமும், தேவைப்படுபவர்களின் முதன்மையானவரையும் கருத்திற் கொண்டு நூறு மாணவர்களுக்கு கல்வி நிதியமும் வழங்கி வைக்கப்பட்டது.  இதன் போது அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலையில் இரு திறந்த இதய அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய யாழ். போதனா வைத்தியசாலையின் இதயசத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி முகுந்தன் சிறப்பாகப் பொன்னாடை அணிவித்துக் கெளரவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த ஐந்து சான்றோர்கள் 'சிவத்தமிழ் விருது' வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். வாழ்நாட் பேராசிரியர் கலாநிதி- உமா குமாரசாமி, தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான நிர்வாகச் செயலாளர் நாகலிங்கம் தவநாதன், அளவெட்டியைச் சேர்ந்த இசை வித்தகர் வி.கே. நடராசா,  வைத்தியகலாநிதி செல்வி- ஈஸ்வரி கந்தையா, கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயப் பிரதம அறங்காவலர் சி. சுப்பிரமணியம் செட்டியார் ஆகியோரே இவ்வாறு இவ்வருடம் 'சிவத்தமிழ் விருது' வழங்கிக் கெளரவிக்கப்பட்டவர்களாவார்.

'சிவத்தமிழ் விருது'  வழங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களில் கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயப் பிரதம அறங்காவலர் சி. சுப்பிரமணியம் செட்டியார் முதுமைப் பிணி காரணமாக குறித்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. சிவத்தமிழ் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய நான்கு சான்றோர்களில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தான நிர்வாகச் செயலாளர் நாகலிங்கம் தவநாதன், அளவெட்டியைச் சேர்ந்த இசை வித்தகர் வி.கே. நடராசா ஆகியோர் தம்பதிகளாகக் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்டனர். சிவத்தமிழ் விருதினை இலங்கையின் இளைப்பாறிய பிரதம நீதியரசர் க. ஸ்ரீபவன் வழங்கிக் கெளரவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment