//]]>

Friday, March 9, 2018

இனவாத வன்செயல்களுக்கு எதிராக யாழில் செவ்வாய் கண்டன ஆர்ப்பாட்டம்!

அம்பாறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(13)  முற்பகல் யாழ்ப்பாணத்தில்  கண்டன ஆர்ப்பட்டமொன்றைச்  சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புக்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்குச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு விடுத்துள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற இன அடக்குமுறை யுத்தத்தின் காரணமாகப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட எம்மை மீண்டுமொரு இனவாத யுத்தத்திற்குள் தள்ளும் முயற்சியாக அண்மையில் அம்பாறை மாவட்டத்தைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வன்செயல்கள் அமைந்துள்ளன.எனவே,  இத் திட்டமிட்ட வன்செயல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இன்று(09) தெரிவித்துள்ளது.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment