ஹம்பாந்தோட்டையில் முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கான ஆரம்ப நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 23 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் 5000 ஏக்கர் காணியை சீனாவுக்கு முதலீடு செய்ய வழங்கப் போவதாக அரச தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானதை அடுத்து அதற்கெதிராக எதிர்ப்பலைகள் எழுந்தன.
இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் மற்றும் ஜே.வி.பியினர் உட்பட பௌத்த பிக்குகள், அம்பாந்தோட்டை மக்கள் இணைந்து அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் முதலீட்டு வலயம் சம்பந்தப்பட்ட நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் அம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினமும் அம்பாந்தோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதோடு பிரதான வீதிகளில் ரயர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டு போக்குவரத்திற்கும் தடங்கல் ஏற்படுத்தப்பட்டது.
கலகத்தைக் கட்டுப்படுத்த பொலிஸாரும், கலகம் கட்டுப்படுத்தும் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் அழைத்துவரப்பட்டதோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் என்பன நடத்தப்பட்டன.
இதில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 23 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த நிகழ்வை பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஆரம்பித்து வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி: ஐ.பி.சி
0 comments:
Post a Comment