//]]>

Wednesday, March 7, 2018

பத்தனையில் ஒருவர் அடித்து கொலை:சந்தேகத்தில் இருவர் கைது(Photos)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்லி தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை நேற்று(06)இரவு வீட்டிற்குச் செல்லும் வழியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிறேக்லி தோட்டத்தைச் சேர்ந்த இருவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை கிரேக்லி தோட்டத் தொழிற்சாலையில் உதவி உத்தியோகத்தராக பணி புரியும் இவர் தனது வீட்டுக்கும்,பத்தனைப் பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிறேக்லி தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.திருச்செல்வம் (வயது-38) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் நேற்று வேலைக்குச் சென்று விட்டு இரவு-09 மணி வரை வீட்டுக்கு வராமையால் உறவினர்கள் இவரைத் தேடிச் சென்ற போது இவர் கொலை செய்யப்பட்டிருப்பதனைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன்,மோப்ப நாய்களை விட்டு ஆராய்ந்ததோடு அட்டன் நீதவானும் மரண விசாரணைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment