யாழ். கொக்குவில் சந்தியிலுள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் சற்று முன் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சற்று முன் அப்பகுதிக்கு வந்த இளைஞர் குழுவொன்று குறித்த விற்பனை நிலையத்தில் நின்ற இளைஞர்களைத் தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். குறித்த சம்பவத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாகச் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டனர். தாக்குதல் மேற்கொண்டவர்களில் ஒருவர் தப்பிக்க முற்பட்ட போதும் அவரைப் பொலிஸார் கைது செய்தனர்.
பத்து மோட்டார் சைக்கிள்களில் வந்த 12 பேர் கொண்ட குழுவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment