வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் விளையாட்டுத் துறையில் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சளைத்தவர்களால் என்பதை எடுத்துக் காட்டும் முகமாக அண்மைக் காலமாக சர்வதேசப் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகிறார்கள். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் சர்வதேச பொதுநலவாய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பளுதூக்களில் யாழ்.மத்திய கல்லூரி மாணவன் தங்கப் பதக்கத்தையும், யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி மாணவி பளுதூக்கலில் இரண்டாமிடத்தையும் பெற்று வடக்கு மாகாணத்துக்குப் பெருமை தேடித் தந்தனர். இந்த வருடம் யாழ். வயாவிளான் மத்திய கல்லூரி மாணவிகள் இருவர் மலேசியாவில் இடம்பெற்ற தெற்காசிய நாடுகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டியில் பதக்கங்கள் வென்று இந்தக் கல்லூரிக்கும், வடக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தார் வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார்.
யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழாவும், நிறுவுநர் நினைவு நாளும் திங்கட்கிழமை(16) கல்லூரியின் ஆ.சி.நடராஜா அரங்கில் அதிபர் வே. த. ஜயந்தன் தலைமையில் இடம்பெற்ற போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய நாட்டிலே ஏற்பட்ட கடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாகப் பல்வேறு அழிவுகளை இந்தக் கல்லூரி சந்தித்துள்ளது. தனது சொந்தவிடத்தை விட்டு இடம்பெயர்ந்து உரும்பிராய்க் கிராமத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த போதும் மிகவும் குறைந்த வளங்களுடன் சிறப்பாகக் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெற்று வந்தன. அப்போதைய அதிபராக இருந்த ஆ.சி.நடராஜாவின் சரியான வழிப்படுத்தலே இதற்குக் காரணமாகும்.
இந்தக் கல்லூரி வருடா வருடம் கல்வியிலும், இணைப்பாட விதானச் செயற்பாடுகளிலும் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்தக் கல்லூரியில் பயின்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். கடந்த வருடம் நடைபெற்று முடிந்த க.பொ. த உயர்தரப் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் 3 பாடங்களிலும் ஏ தரச் சித்தி பெற்று மாவட்ட நிலையில் முன்னிலையில் திகழ்கின்றனர்.
வசதி படைத்த மாணவர்கள் பலரும் நகர்ப்புறப் பாடசாலைகளை நாடிச் செல்கையில் வசதி குறைந்தவர்கள் பெரும்பாலானோர் இந்தக் கல்லூரியை நாடி வருவதாகக் கல்லூரி அதிபர் என்னிடம் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில் வறுமையிலும் தாங்கள் கல்வி கற்று உயர் நிலையை அடைய வேண்டும் என்ற நோக்குடன் இந்தக் கல்லூரியின் மாணவர்கள் பரீட்சைகளில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று வருகின்றமை பாராட்டுக்குரியது. அது மாத்திரமன்றி இந்தக் கல்லூரி மாணவர்கள் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் கூட மாகாணம் மற்றும் தேசிய ரீதியாகப் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.
கடந்த காலங்களில் பல்வேறு இன்னல்களை எமது கல்வித் துறை சந்தித்திருக்கிறது. பல இடப் பெயர்வுகளை எமது மாணவர்களும், பாடசாலைகளும் எதிர்நோக்கியிருக்கின்றன. பா டசாலைகள் பல அழிவடைந்திருக்கின்றன. பல ஆண்டுகள் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் மாணவர்கள் கற்றலுக்காக ஏங்கியிருக்கின்றனர்.
இவ்வாறு பல இன்னல்களைச் சந்தித்த எமது வடமாகாண மாணவர்கள் எங்களாலும் முடியும் என்பதைக் கல்வித் துறையில் சாதனைகளாக வெளிப்படுத்தி வருகிறார்கள். எங்கள் மாணவர்களின் உயர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் அதிபர், ஆசிரியர்களை நாங்கள் பாராட்ட வேண்டும்.
எமது மாகாணத்தின் கல்வி முன்னேற்றம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கைகளிலேயே தங்கியுள்ளது. மாணவர்கள் ஒவ்வொருவரும் தாம் உயர்வான நிலையை அடைய வேண்டும் எனும் திடசங்கற்பத்துடன் கல்வி உயர்விற்காகப் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment