இலங்கை அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை வழங்குமாறு சர்வதேச சமூகத்தை கோரும் கையழுத்துப் போராட்டம் இன்று திங்கட்கிழமை(26) பிற்பகல் யாழ்.நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல்-04.15 மணியளவில் யாழ்.நகரிலுள்ள பிரதான பேருந்து நிலையம் முன்பாக கையெழுத்துப் போராட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்ற போது தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள்,மதகுருமார்கள், அரசியல், சமூகச் செயற்பாட்டாளர்கள், பெண்கள் சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.
கையெழுத்துப் போராட்டத்தின் ஒரு கட்டமாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும்,வடக்கு,கிழக்கில் குறித்த கையெழுத்துப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இரண்டு வருட கால அவகாசத்தில் எஞ்சியுள்ள ஒரு வருடத்தை தொடர்ந்தும் வழங்கி காலத்தை வீணடிக்காது இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வேதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்தப் போராட்டம் அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment