எங்களுக்கான தீர்வு எட்டப்படாவிட்டால் உள்ளுராட்சி மன்ற தேர்தலை புறக்கணிப்பதாக நாங்கள் எங்களின் போராட்டத்தின் போது குறிப்பிட்டிருந்தோம். அதன்படி இந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஒட்டு மொத்தப் பட்டதாரிகள் சமூகம் ஒன்றிணைந்து நாடு பூராகவும் தோற்கடிக்கச் சய்துள்ளோம். இந்நிலையில் மீண்டும் எமக்கான தீர்வுகள் சரியான முறையில் கிடைக்காவிட்டால் எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் தனித்துச் சுயேட்சையாக களமிறங்குவோம் எனக் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வழங்கப்படவுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான ஒரு தொகை வேலைவாய்ப்பில் பலர் நிராகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) காரைதீவு சண்முகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ,
தற்பொழுது கிழக்கு மாகாண சபை பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளாகிய நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். இந்தவிடயத்தில் ஆளுநரும், கிழக்கு மாகாண சபை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவும் எமது மாவட்டத்திற்கு அநீதி இழைத்துள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment