//]]>
அல்லிப்பூ பறிக்க-

Sunday, January 7, 2018

வாழும் போதே அறக்கொடை பிரகடனப்படுத்திய சிவத்தமிழ்ச் செல்வி:சிறப்புக் கட்டுரை

தெய்வத்திருமகள் அன்னை சிவத்தமிழ்ச் செல்வி அம்மையார் அவர்களின் தொண்ணூற்றி மூன்றாவது பிறந்தநாள் 07.01.2018 இன்றாகும்.

எம் மண் செய்த மாதவத்தால் தெல்லிப்பழை திருவூரில் வாழ்ந்த உயர்பண்பாளர். அப்பாக்குட்டி, தையற்பிள்ளை தம்பதிகளுக்கு 07.01.1925 மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தார். தெய்வத்திருவருளால் சிறு பராயத்திலேயே ஆன்மீக நாட்டம் உடையவராக விளங்கிய அம்மையார் கல்வியிலும் முன்னிலை வகித்தார். சிறுமியாகப்  பாடசாலை மேடையில் 1931இல் பரிசுபெறத் தொடங்கிய அம்மையார் இறையடி சேரும் வரை பரிசுகளாலும், விருதுகளாலும் தன் பெருமையை நிலை நாட்டினார்.

கணீர் என்ற குரலில் பேசும் ஆற்றல் மிக்க அம்மையார் பாடும் ஆற்றலும் மிக்கவர். 1941ஆம் ஆண்டு இராமநாதன் கல்லூரியில் இயங்கிய ஆசிரியர் கலாசாலையில் கற்கும் தகுதியைப் பெற்றார். அக்காலத்தில் திரு.சு.நடேசபிள்ளை,திரு.ஏ.எஸ்.சுந்தர்ராஜ ஐயங்கார், பிரம்ம ஸ்ரீ இராமசாமி ஐயர், பிரம்ம ஸ்ரீ கணபதி ஐயர் போன்ற தமிழ் நாட்டு அறிஞர்களிடம் உன்னத தமிழ் அறிவைப் பெற்றார். மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று
ஆசிரியராகப் பணியேற்றார்.

இராமநாதன் கல்லூரி விடுதிச்சாலை வாழ்வு அம்மையாரை சமய நெறிக்குள் மிகவும் ஈடுபடுத்தியது எனலாம். 1946ஆம் ஆண்டு மட்டக்களப்பு சென்சிசிலியா பாடசாலையில் ஆசிரிய சேவையை தொடங்கிய அம்மையார் கிழக்கிலங்கையில் பலரது பாராட்டைப் பெற்ற ஆசிரியராக விளங்கினார். 1949ஆம் ஆண்டு கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலைக்கு இடம் மாறிவந்த அம்மையார் இப்பாடசாலையில் பதினொரு ஆண்டுகள் அரிய சேவை ஆற்றினார்.

1953இல் பண்டிதர் பரீட்சையிலும், 1958 ஆம் ஆண்டு சென்னை சைவ சித்தாந்த சமாசம் நடாத்திய சைவப்புலவர் பரீட்சையிலும் சிறந்த சித்தியைப் பெற்றார். சிறு பராயத்தில் பாடசாலை அரங்குகளில் உரையாற்றிய அம்மையார் கொழும்பில் ஆசிரியராகக் கடமையாற்றிய போது இவரது புலமை கண்டு
கொழும்பில் உள்ள திருக்கோயில்கள் ஆன்மீக உரைக்கு வாய்ப்பளித்தன.

1956ஆம் ஆண்டு திருக்கேதீச்சர சிவராத்திரி விழாவில் இவர் ஆற்றிய உரையை இலங்கை வானொலி அஞ்சலி செய்தது. அன்று முதல் இவரது பெருமை இலங்கை முழுவதும் பரவியது. கொழும்பு தமிழ்ச்
சங்கத்தில் 1956ஆம் ஆண்டு அம்மையார் திருமுருகாற்றுப்படை என்ற தலைப்பில் உரையாற்றி அறிஞர் கூட்டத்தில் பெருமதிப்பைப் பெற்றார்.

1958ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரத்தினால் யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் பெற்று வந்தார். அளவெட்டி சதாநந்த வித்தியாலயத்திலும் பின் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும்நிறைந்த ஆசிரியப்பணி ஆற்றினார்.

1963 ஆம் ஆண்டு துர்க்காதேவி தேவஸ்தானத்தின் திருப்பணிச்சபையில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்ட அம்மையார் 1965 இல் துர்க்கா தேவஸ்தான நிர்வாக சபையில் பொருளாளராக நியமிக்கப்பட்டார். அம்மையாரின் அரிய முயற்சியினால் ஆலயம் எழுச்சி பெற்றது. 1977ஆம் ஆண்டு
தேவஸ்தான நிர்வாக சபையின் தலைவராக அம்மையார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அம்மையாரின் அளப்பெரிய தொண்டினால் இத் திருக்கோயில் சர்வதேசம் முழுவதும் பிரசித்தம் பெற்ற கோயிலாக மாறியது. ஆலயம் சமூகத்திற்கு எவ்வாறு உதவலாம் என்பதை தன் தலைமைத்துவ ஆளுமையால் நிரூபித்துக் காட்டியவர் அம்மையார். ஆதரவற்ற பெண்குழந்தைகளுக்கு கோயிற் சூழலில் துர்க்காபுர மகளிர் இல்லத்தை ஸ்தாபித்து பலர் வாழ வழிகாட்டியவர். அல்லலுற்றவர்கள், அகதிகளாக அலைந்தவர்கள்,நோயாளர்கள், கைம்பெண்கள் கவலையைப்போக்குவதற்கு
அம்மையார் ஆற்றிய தொண்டு எவராலும் மறக்கமுடியாது.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று அரிய ஆன்மீக உரைகளை ஆற்றி சைவமக்களை நெறிப்படுத்தியவர் இவர். அம்மையாரின் சொற்பொழிவு நடைபெறாத திருக்கோயில்கள்
இல்லையென்று கூறுமளவுக்குத் தன் நாவன்மையால் சமய வாழ்வை நெறிப்படுத்தியவர்.

பல தேவஸ்தானங்கள் பல கௌரவப்பட்டங்களை வழங்கிய போதிலும் காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் வழங்கிய 'சிவத்தமிழ்ச் செல்வி' என்ற பட்டத்தைத் தன் பெயரோடு விருப்பமாக ஏற்றுக் கொண்டவர்.

இன்று அம்மையார் எம்மோடு இல்லை. 2008ஆம் ஆண்டு ஆனிமாதம் 15 ஆம் நாள் இறையழைப்பை ஏற்று அம்மையார் இம் மண்ணைவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால் அம்மையார் சாதித்தவை ஏராளம்.
அவருக்கு நிகராக ஒருவரையும் சொல்ல முடியவில்லை. சமூகத்திற்காக முழுமையாகத் தன்னை அர்ப்பணித்த தெய்வப்பிறவி. ஏழை பங்காளராக இறுதி மூச்சுவரை வாழ்ந்த வழிகாட்டி.

தான் வாழும் போதே தன் பிறந்த தினத்தை முன்னிட்டு அன்பர்கள் வழங்கிய நிதியை அறக்கொடையாகப் பிரகடனப்படுத்தியவர்.அதனால், அம்மையாரின் அறக்கொடை நிதியம் நிரந்தர நிதியமாக வளர்ச்சி பெற்றுள்ளது. அவர் காட்டிய வழியில் எமது தேவஸ்தானம் வைத்தியசாலைகளுக்கும்,
மாணவர்களுக்கும் அறக்கொடை வழங்கி அவர்பணி தொடர்கிறோம். அன்னாரின் பெயரால் ஆண்டு தோறும் எம்மண்ணில் தொண்டாற்றிய சான்றோர் ஐவரைத் தேர்ந்தெடுத்து சிவத்தமிழ்விருது வழங்கி சான்றோர் சிறப்பைக் கௌரவப்படுத்தி வருகிறோம்.

('பாங்கான தெய்வப் பணிகள் பலசெய்த
 ஓங்கார ஓசை உறங்கியதால் -தாங்காதே
ஏந்திச் சுடர்விளக்கை என்றும் வணங்கிடுவோம்
நீந்துகவே முத்தியின்ப நீழல்- வி.கந்தவனம்)
{சிவத்தமிழ்ச் செல்வி அன்னையின் தொண்ணூற்றி மூன்றாவது
பிறந்தநாளை முன்னிட்டுத் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி - ஆறு. திருமுருகன் எழுதிய சிறப்புக் கட்டுரை மேற்படி கட்டுரையாகும்}

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்