//]]>
அல்லிப்பூ பறிக்_

Thursday, July 13, 2017

இழுவைமடித் தொழிலுக்கெதிரான சட்ட மூலத்திற்கெதிராக ஸ்டாலின், வைகோ, இராமதாஸ் நீலிக்கண்ணீர்! (Photos)

இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இழுவைமடித் தொழிலுக்கெதிரான சட்ட மூலத்திற்கெதிராக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களான  ஸ்டாலின், வைகோ, இராமதாஸ் ஆகியோர்  நீலிக்கண்ணீர் வடிப்பது தமிழ்நாட்டு மீனவர்களை ஏமாற்றி வாக்குகளைச் சம்பாதிப்பதற்கான ஒரு கபட நாடகம் என வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் குற்றம் சாட்டியுள்ளது. 

இது தொடர்பில் நேற்றுப் புதன்கிழமை(12) பிற்பகல் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் மொகமட் ஆலம், செயலாளர் என். வி. சுப்பிரமணியம், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கூட்டாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

நீண்ட நாட்களாக, நீண்ட வருடங்களாக புரையோடிப் போயிருந்த இழுவை மடித் தொழிலைத் தடுப்பதற்கான அல்லது இல்லாமல் ஒழிப்பதற்கான போராட்டங்களை வடபகுதி மீனவர்கள் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த-06.7.2017 அன்று பாராளுமன்றத்தில் அதற்கான சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்ட மூலம் நிறைவேற்றுவதற்குக் காரணமான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிற்கும், மீன்பிடி அமைச்சரிற்கும் ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்களிற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஊடகங்களுக்கும் எமது நன்றிகள். 

எங்களுடைய போராட்டம் கடந்த-2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டாலும் 2004, 2010, 2013, 2014, 2015 பேச்சுவார்த்தைகளின் ஊடாகப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி இறுதியாக கடந்த வருடம் நவம்பர் மாதம்-02 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இலங்கை- இந்திய மீனவர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையில் இந்திய மீன்பிடி அமைச்சர் ஜெயக்குமார்,பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள், கடற்படைத்தளபதி,செயலாளர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், இலங்கைத் தரப்பில் இந்தியாவுக்கான இலங்கை உதவித் தூதுவர் கிருஷ்ண மூர்த்தி, உதவிப் பணிப்பாளர் லால்காந்த உட்பட பத்து வடபகுதி மீனவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தோம்.  இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் பயன்மிகுந்ததாக அமைந்திருந்தது. 

அதனைத் தொடர்ந்து கடந்த-05 ஆம் திகதி டெல்லியில் அமைச்சு மட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றது. அந்த அமைச்சு மட்டப் பேச்சுவார்த்தையின் போது டில்லியில் முதன்முறையாக மத்திய அரசாங்கம் இழுவை மடித் தொழில் கெடுதலானது. அதனைத் தடுக்க வேண்டும் என எழுத்து மூல அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இழுவை மடித் தொழில் கெடுதியானது என்ற கருத்தை ஏற்றுக் கொண்டார். 

அதன் பின்னர் இந்த விடயத்தில் தொடர்ச்சியாக நாம் பல்வேறு அழுத்தங்களை வழங்கி வந்தோம். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாகப் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. தனிநபர் பிரேரணை பல்வேறு சட்டச் சிக்கல்களை ஏற்படுத்துமென்பதால் அரசின் ஊடாக குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலத்திற்கெதிராக இந்திய மீனவர்கள் நடாத்தி வரும் போராட்டம் அர்த்தமற்றது. இந்தப் போராட்டத்தின் பின்புலத்திலுள்ளவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. 

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித்தலைவராகப் பதவி வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இழுவைமடித் தொழிலுக்கெதிரான சட்ட மூலத்தைக் கறுப்புச் சட்டமூலம் என்று கூறியுள்ளார். எங்கள் நாட்டிற்குள் எங்களுடைய வளங்களைப் பாதுகாத்து , எங்களுடைய மீன் அபிவிருத்தியைப் பெருக்கி அபிவிருத்தி அடைவதற்கும், எங்களுடைய சந்ததியை வாழ வைப்பதற்கும் தூர நோக்குச் சிந்தனையின் அடிப்படையில் எங்களுடைய தொடர் போராட்டங்களின் பலனாகக் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நிய நாடு அத்துமீறி எங்களுடைய கடற்பரப்புக்குள் நுழைந்து எங்களுடைய வளங்களை அழித்தும்,  எங்களைப்  பொருளாதார ரீதியாகப் பெரும் பாதிப்பிற்கும் உள்ளாக்கி வருவதைத் தடுப்பதற்கும் நீண்ட போராட்டத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்குப் பெயர் கறுப்புச் சட்டமூலமா? 

கலைஞர் கருணாநிதியின் மகனாகவுள்ள ஸ்டாலின் கறுப்புச் சட்டத்திற்கு எந்தவகையில் பொருள் கொள்கிறார்? 

குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்குப் பாராளுமன்றத்தில் எந்தவித எதிர்ப்புக்களுமில்லாமல் அனைத்துக் கட்சிகளும் முழுமையான ஆதரவு வழங்கியமை எமது மீனவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும் வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்