தமிழகத்தின் சென்னை வேளச்சேரி-தாம்பரம்நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை அருகில் ஆசான்நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பில் சிறப்பு முகாம் 28-02-2018 முதல் 06-03-2018 வரை (ஏழு நாள்கள்) பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் நடைபெற்றது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீரால் அழிந்து வருகிறது.
நீரை உறிஞ்சும் கருவேல மரங்கள் மற்றும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சதுப்பு நிலம் பொலிவிழந்து உள்ளது. பறவைகளும் உயிர் வாழ உணவு தேடி வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகளால் மூடப்பட்ட சதுப்பு நிலத்தைச் சுத்தப்படுத்த இக்கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் ஏழு நாள்கள் முகாம் அமைத்து சதுப்பு நிலம் பாதுகாப்பது பற்றிப்பொதுமக்களுக்கு எடுத்துரைத்தும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியும் பதாகைகளை வைத்து மனித சங்கிலி வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும், நடைபயணம் மேற்கொண்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கைவேலி, காரப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட சதுப்பு நிலம் ஒட்டிய பகுதிகளில் வளர்ந்துள்ள கருவேலமரங்களை அகற்றினர். நிறைவு நாளில் பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிவகுமார், சென்னைப் பல்கலைகழக நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா. முனைவர் கோ. பாஸ்கரன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டனர். பின்பு முகாமில் கலந்து கொண்டு தொண்டாற்றிய நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் பள்ளிக்கரணை வனச்சரக அலுவலர் திரு நடராஜன், கல்லூரி முதல்வரும் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான முனைவர் சு. இராமநாதன் போன்றோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டத் திட்ட அலுவலர் முனைவர் பொன். ரமேஷ்குமார் ஒருங்கிணைத்தார்.
0 comments:
Post a Comment