//]]>

Saturday, March 10, 2018

உரும்பிராயில் சைக்கிள் மோதி விபத்து:நடந்தது இதுதான்!(Video)

யாழ்.உரும்பிராய்ச் சந்திக்கு அருகில் பலாலி வீதியில் இன்று சனிக்கிழமை(10) பிற்பகல்- இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள்- துவிச்சக்கர வண்டி விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளாகியதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உரும்பிராயிலிருந்து கோண்டாவில் சந்தி நோக்கி மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை அதே பகுதியிலிருந்து துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரொருவர் பின்புறமாக மோதியதாலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் வேகமாக வந்த குறித்த குடும்பஸ்தர் அப்பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் மதுபானம் வாங்குவதற்காக சடுதியாகத் துவிச்சக்கர வண்டியைத் திரும்பியுள்ளார்.

இதன் போது பலாலி வீதியால் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார்ச் சைக்கிளின் பின்புறம் கடுமையாக மோதியதில் இருவரும் சடுதியாக வீதியில் விழுந்ததுடன் துவிச்சக்கர வண்டியில் சென்ற சேர்ந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் அவரது மூக்கால் இரத்தமும் வழிந்துள்ளது. அத்துடன் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த இளைஞனும் சிறுகாயங்களுக்குள்ளானார். சம்பவத்தில் இளைஞன் பயணித்த மோட்டார்ச் சைக்கிள் கடும் சேதமடைந்தது.

42 வயதான குறித்த குடும்பஸ்தர் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் உரும்பிராய்ப் பகுதியிலுள்ள உறவினரொருவரின் வீட்டுக்குச் சென்று அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டு வருவதாகப் பொய் கூறி உறவினரொருவரின் துவிச்சக்கர வண்டியைப் பெற்று வந்த போதே குறித்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.   

துவிச்சக்கர வண்டி செலுத்திய குடும்பஸ்தரின் கவனயீனமே குறித்த விபத்துக்கான காரணமெனச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் மேற்கொண்டதாகவும் எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
(தமிழின் தோழன்-) 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment