//]]>
அல்லிப்பூ பறிக்க படக-

Wednesday, February 1, 2017

மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் யாழ்ப்பாணத்தில் கூறியது என்ன தெரியுமா? (Video)


எமது கலாசாரங்களின் பெயர்களைச் சொல்லிக் கொண்டும், மதங்களின் பெயராலும் நாம் பிளவுண்டிருக்கிறோம். இது தேவையா? வீட்டுக்குள் பிரிவு வேண்டாம், சமூகத்திலே பிரிவு வேண்டாம். மகாகவி பாரதியார் கூறிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வுகள் இன்றைய சூழலில் எம்மனைவருக்கும் அவசியம் தேவைப்படுகிறது.

நான் உனக்கு ஆதரவாகவிருக்கிறேன். நீ எனக்கு ஆதரவாக இரு என்ற உணர்வை எம் சமூகத்திலுள்ள அனைவரதும் மனதிலும் ஏற்படுத்துவோம் எனத் தெரிவித்தார் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப் பேரனும், பிரபல கர்நாடக சங்கீத வித்துவானுமான ராஜ்குமார் பாரதி.

யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 68 ஆவது குடியரசு தின விழா கடந்த  வியாழக்கிழமை(26.01.2017) காலை யாழ்.றக்கா வீதியில் அமைந்துள்ள யாழ்.இந்தியத் துணைத் தூதரகத்தின் வாசஸ்தலத்தில் சிறப்பாக இடம்பெற்ற போது கலந்து கொண்டு விசேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

உலகத்தில் எந்தத் தருணத்திலும் தேவையாகவிருப்பது அன்பு ஒன்றே. இந்த அன்பைத் தவம் எனக் கூறுகிறான் மகாகவி பாரதி. அன்பிற் சிறந்த தவமில்லை என்கிறான். உயிர்களிடத்தில் அன்பு, நம்பிக்கை, நெஞ்சில் வீரம் என்பன மனிதர்களிடத்தில் காணப்பட வேண்டுமென அவன் வலியுறுத்துகிறான்.
மேன்மை ஏற்பட வேண்டுமானால் எம்மிடையே ஒருமைப்பாட்டு உணர்வு முக்கியம். இந்த ஒருமைப்பாட்டு உணர்வைப் போதித்தவன் பாரதி. நம்மிடையே நிலவுகின்ற ஏகப்பட்ட பிரிவினைகளை எமக்கு உணர்த்தி, எமது சிறுமதி தான் பிரிவினைக்கான காரணம் என்பதை எமக்கு அறிவுறுத்தி, தூங்காதே விழித்துப் பார் என உத்வேகம் ஊட்டக்கூடிய பாடல்களைப் பாடியவன் தான் பாரதி. ஒருமைப்பாடு குடும்பத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே அவனுடைய கருத்து. நாம் எமது பிள்ளைகளுக்கு ஒருமைப்பாட்டு உணர்வை அவர்களின் சிறுவயதிலிருந்தே போதிக்க வேண்டும்.

உலகத்தில் இரண்டு ஜாதிகளே உள்ளன. நீதி நேர்மை வழி நின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர் எனவும் மகாகவி பாரதியார் கூறுகிறார். ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று தமிழ்மகள் சொல்லிய சொல்லை அமிழ்தமென்போம் என்கிறார். தமிழ்மகள் என அவர் ஒளவைப் பிராட்டியாரையே குறிப்பிடுகிறார்.

பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா....மோதி மிதித்து விடு பாப்பா....அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா....எனக் குழந்தைகள், சிறுவர்களைப் பார்த்துப் பாரதியார் பாடல் இயற்றியுள்ளார். சிறுவர்களுக்கு எந்தவித அச்சமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பது அவரது எண்ணமாகவிருந்தது. இவ்வாறான துணிச்சல் வேறு எந்தக் கவிஞனுக்கு வரும்....! இவ்வாறான சொற் பிரயோகங்கள் தான் பாரதியாரை வேறு கவிஞர்களிலிருந்து வேறாக்கித் துணிச்சல் மிகு தனித்துவமான கவிஞனாக எமக்கு அடையாளம் காட்டியது. பாதகம் சிறிதாயினும் செய்யக் கூடாது என்ற  எண்ணம் பாதகம் செய்பவர்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே பாரதியார் இவ்வாறு பாடியுள்ளார் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்